டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன், 640 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளதாக மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. மேலும் 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியாவில் தொற்று பரவலின் தாக்கம் ஏறி இறங்கி வந்துகொண்டிருக்கிறது. நேற்று 30ஆயிரத்துக்கும் கீழே கொரோனா பாதிப்பு குறைந்தது. 132 நாட்களுக்கு பிறகு தொற்றி பரவல் வெகுவாக குறைந்தது சுகாதார வல்லுநர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், நேற்று மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதியதாக மேலும் 43,654 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றைய பாதிப்பு 29,689 ஆக இருந்த நிலையில், இன்று கூடுதலாக 13,965 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,14,84,605 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் மேலும்  640 பேர் கொரோனா தொற்றுபாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,22,022 ஆக உயர்நதுள்ளது.

அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 41,678  பேர் கொரோனா பிடியில் இருந்து விடுப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,06,63,147 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 3,99,436  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை  44,61,56,659 ஆக உயர்ந்துள்ளது.