போர் என்றாலே அழிவின் ஆரம்பம் என்று உலக மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர். காரணம் எல்லா நாடுகளும் அணுகுண்டுகளை வைத்துக்கொண்டு ஆட்டம் காண்பித்துக்கொண்டு இருக்கின்றன.
இந்த அணுகுண்டின் வீரியம், நாம் இன்றுவரை ஜப்பான் மக்கள் வாயிலாக உணர்ந்து கொண்டுள்ளோம். ஒரு ‘லிட்டின் பாய்’  என்ற குட்டிப்பையனின் தாக்குதலால் ஜப்பான் நகரமே அழிந்தது.  அதை நினைத்துப் பார்த்தோமானால் போர் என்றாலே ஒருவித பயம் மக்களிடையே தோன்றுகிறது.

இந்தியாவிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாக் ராணுவ தளபதி நியாஜி
இந்தியாவிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாக் ராணுவ தளபதி நியாஜி

ஏற்கனவே 1971ல் இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றபோது, இந்திய படையினரின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து தோல்வியை ஒப்புக்கொண்டு பாகிஸ்தான் படை தளபதி சரண் அடைந்தார். ‘அந்தப் போரில் எவ்வளவு பேர் இறந்தனர்? 26,000 பேர் என்றது பாகிஸ்தான். இந்தியாவும், வங்கதேசமும் முப்பது லட்சம் பேர் என்றனர். உண்மை இந்த இரண்டுக்கும் நடுவே எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது.
ஆனால் தற்போது சூழல் அப்படி இல்லை… எல்லாம் அணுக்கள் மயம்….

தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. எல்லை பகுதிகள் போர் மேகங்களால் சூழப்பட்டு வருகிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது நாட்டுக்காக கடமையாற்ற வீராப்போடு நெஞ்சை நிமிரித்து நடைபோட்டு வருகிறார்கள்.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இருநாடுகளைச் சேர்ந்த 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்புர்கள் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ரட்ஜெர்ஸ், கொலரோடா-பவுல்டர் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையில் பாதியாக இந்த போரில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அணுஆயுதங்களைக் கொண்ட இரு நாடுகளின் போரால் புவியின் ஓசோன் படலத்தில் பாதி அழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே ஏற்படும் போரில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். இதனால் ஏற்படும் சூழலியல் மாற்றத்தால் உலக மக்கள் தொகையில் பாதி பேர் வறட்சி மற்றும் பசியால் வாடுவர் என்று அணு ஆயுதப் போருக்கு எதிரான மருத்துவர்கள் கூட்டமைப்பு (International Physicians for the Prevention of Nuclear War) கடந்த 2013-ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு கணக்கின்படி, பாகிஸ்தானிடம் 110 முதல் 130 அணு ஆயுத ஏவுகணைகள் இருக்கக் கூடும். 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 10 முதல் 110ஆக இருந்தது. இது உலக அளவில் அணு ஆயுதங்களுக்கு எதிரான அணு விஞ்ஞானிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல் (Bulletin of the Atomic Scientists, a global disarmament advocacy). இந்தியாவிடமோ 110 முதல் 120 ஏவுகனைகள் கைவசம் இருக்கின்றன.
india-pakistan
பாகிஸ்தான் கைவசமுள்ள ஏவுகனைகள் மூலம் இந்தியாவின் முக்கியமான மெட்ரோபாலிடன் நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய நகரங்களைத் தாக்க முடியும் என்கிறார்கள் மேலேகுறிப்பிட்ட அதே அமைப்பினர்.
பாகிஸ்தான் கைவசமுள்ள ஏவுகணைகளில் 66% ஏவுகணைகள் தரையிலிருந்து மேலெழும்பித் தாக்கக் கூடியவையே. அதிகபட்சமாக 2,500 கி.மீ. தூரம் வரை பாகிஸ்தான் ஏவுகணைகளால் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதேபோல வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடியதாக 28% ஏவுகணைகள் பாகிஸ்தானிடம் உள்ளன. பாகிஸ்தான் கடற்படையிடம் 8 ஏவுகணைகள் கைவசமிருப்பதாகத் தகவல்.
இந்தியாவைப் பொருத்தவரை பிரித்வி மற்றும் அக்னி ஏவுகணைகள் பலம் சேர்க்கின்றன. இதன்மூலம் பாகிஸ்தான் போன்ற சிறிய அளவிலான நாட்டை சில மணி நேரங்களிலேயே தீக்கிரையாக்க முடியும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் பாதுகாப்புத் துறை நிபுணர்கள்.
அணு ஆயுதங்களுக்கு எதிரான அணு விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தரும் தகவல்களின் படி,  இந்தியாவிடம் தரையிலிருந்து தாக்க வல்லமை பெற்ற 56 ஏவுகணைகளும், வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தும்படியான 48 ஏவுகணைகளும், கடல்வழித் தாக்குதலுக்காக 14 ஏவுகணைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாகிஸ்தானின் முக்கியநகரங்களான இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, ராவல் பிண்டி மற்றும் ராணுவத் தலைமையகம் அமைந்துள்ள நௌஷீரா ஆகிய இடங்களை சிலமணி நேரங்களில் தரைமட்டமாக்கி விடும் என்கிறார் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் தேசிய பாதுகாப்பு மைய ஊழியரான சமீர் பட்டீல் தெரிவித்துள்ளார்.