ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 347 ரன்களை எடுத்தாலும், 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியின் நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர் மற்றும் டாம் லாதம் ஆகியோர் அடங்கிய மூவர் கூட்டணி நியூசிலாந்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.

348 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை நோக்கிப் பயணித்த அந்த அணிக்கு, துவக்க வீரர் மார்டின் கப்தில் வழக்கம்போல் 30 ரன்களுக்கு மேல்(32) எடுத்து அவுட்டானார்.

பின்னர், நிக்கோல்ஸ் 78 ரன்களும், ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்களும், லாதம் 48 பந்துகளில் 69 ரன்களும் அடித்தனர். 29 ரன்களை இந்திய பவுலர்கள் தம் பங்கிற்கு கூடுதலாக வழங்கினர்.

இன்றையப் போட்டியில் யாருடையப் பந்துவீச்சும் எடுபடவில்லை. ஹேமில்டன் மைதானம் சேஸிங் செய்வதற்கு உகந்த மைதானம் என்று கூறப்படுகிறது. பும்ரா மட்டுமே 10 ஓவர்கள் வீசி 53 ரன்களைக் கொடுத்தார். ஆனால், அவருக்கு விக்கெட்டுகள் விழவில்லை.

நியூசிலாந்து அணியில் 2 பேர் ரன்அவுட் ஆனார்கள். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் எடுத்தனர்.