ஜெனிவா: உலகளாவிய கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார அமைப்பு, ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்பட உலக நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில்   ‘கோவேக்ஸ்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின கீழ் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாட்டில் தயாரிக்ப்பட்டு வரும் தடுப்பூசிகளை பெற்று உலக சுகாதார நிறுவனம்  மற்ற நாடுகளுக்கு வழங்கி வருகிறது.  இந்தத் திட்டத்துக்கு அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வழங்குவதில் சீரம் நிறுவனம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு உள்ள நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, மாடர்னா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த மாதம்  ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில், கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ்கள் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக  உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்து உள்ளார். ஆனால்,  இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என தெரிகிறது. இதன்காரணமாக இந்த தடுப்பூசிகள் எப்போது இந்தியாவுக்கு வந்து சேரும் என தெரியவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள   நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் சமீபத்தில் கூறுகையில், “இந்த தடுப்பூசிகளை எவ்வாறு இறக்குமதி செய்வது, நாட்டில் கிடைக்கச்செய்வது என்பது பற்றி மாடர்னா நிறுவனத்துடன் அரசு பேசி வருகிறது” என குறிப்பிட்டார்.