புதுடெல்லி: இந்திய தலைநகரிலுள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை 50% என்ற அளவிற்கு குறைக்குமாறு பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டுள்ளது இந்தியா.

இதற்கு பதிலாக, இந்தியாவும், இஸ்லாமாபாத்திலுள்ள தனது ஹை கமிஷனில் பணியாற்றும் ஊழியர்களில் பாதி பேரை திரும்ப அழைக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியின் பாகிஸ்தான் ஹை கமிஷனில் பணியாற்றும் அதிகாரிகளில் சிலர், உளவுபார்க்கும் வேலையிலும், இங்குள்ள தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பிலும் உள்ளதாகவும், பாகிஸ்தானிடம் புகார் தெரிவித்தது இந்தியா.

சமீபத்தில், இரண்டு பாகிஸ்தான் தூதர்கள், உளவுபார்த்த குற்றத்திற்காக பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதையும் இந்தியா உதாரணமாக காட்டியது.

இந்தியாவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, பாகிஸ்தானும், இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய ஹை கமிஷனில் பணியாற்றும் சில அதிகாரிகளுக்கு வேண்டுமென்றே இன்னல் விளைவித்தது நமக்கு நினைவிருக்கலாம்.