டில்லி

ரும் அக்டோபர் நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் அக்டோபர் நவம்பரில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. பிசிசிஐ இந்த தொடருக்கான வரைவு அட்டவணையை ஐசிசி-யிடம் பகிர்ந்துள்ளது. இதை ஐசிசி, தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் கருத்துக் கேட்பதற்காக அனுப்பி வைத்துள்ளது.

இந்த வரைவு அட்டவணைப்படி அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்துடன் மோதுகிறது. இது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அக்டோபர் 8 அன்று இந்தியா தனது முதல்ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

பிறகு 11-ம் தேதி ஆப்கானிஸ்தானுடன் டில்லியிலும், 15-ம் தேதி பாகிஸ்தானுடன் அகமதாபாத்திலும், 19-ம் தேதி வங்கதேசத்துடன் புனேவிலும், 22-ம் தேதி நியூசிலாந்துடன் தரம்சாலாவிலும், 29-ம் தேதி இங்கிலாந்துடன் லக்னோவிலும், நவம்பர் 2-ம் தேதி தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மும்பையிலும், நவ.5-ம்தேதி தென் ஆப்பிரிக்காவுடன் கொல்கத்தாவிலும், நவ.11-ம் தேதி தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் பெங்களூருவிலும் இந்திய அணி விளையாடுகிறது.

தகுதி சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகளுடன் அக்டோபர் 6 மற்றும் 12-ம் தேதிகளில் ஹைதராபாத்தில் பாகிஸ்தான் விளையாடி 20-ம் தேதி ஆஸ்திரேலியாவைப் பெங்களூருவில் சந்திக்கிறது   இந்த அணி. 23-ம் தேதி ஆப்கானிஸ்தானுடனும், 27-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும் சென்னையில் மோதுகிறது பாகிஸ்தான். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தை 31-ம் தேதி கொல்கத்தாவிலும், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை நவம்பர் 5-ம் தேதி பெங்களூருவிலும், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை நவம்பர் 12-ம் தேதி கொல்கத்தாவிலும் விளையாடுகிறது.

அரை இறுதி ஆட்டங்கள் நவம்பர் 15, 16-ம் தேதிகளில் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த இரு ஆட்டங்களும் நடத்தும் மைதானம் முடிவாகவில்லை. இறுதிப் போட்டி 19-ம் தேதி அகமதாபாத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.