சென்னை:
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த ஜூன் 21 முதல் ஜூலை 16 வரை 12,37,552 பயணிகள் பயணம்; நேற்று மட்டும் 69,794 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளன. வார நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நுழைவதற்கு முன்பாக அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது சரியாக அணியவில்லை என்றாலோ ரூ.200 அபராதமாக விதிக்கப்படும். அதன்படி, கடந்த மாதம் 21ம் தேதி முதல் நேற்று வரையில் 46 பயணிகளிடம் இருந்து ரூ.9,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் கொரோனாவை தடுக்க முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.