கோழிக்கோடு

கேரள மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் இடது கண்ணை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.

மாதிரி புகைப்படம்

நாடெங்கும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மக்களைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் Mucormycosis என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளனர். ஏராளமானோரைப் பாதித்த இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும். இத்தொற்று நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலைத் தாக்குகின்றன. இது ஒரு உயிருக்கு ஆபத்தான நோய் ஆகும்..

இந்த நோய் கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு உயிரைக் காக்கத் தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் தூண்டப்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். இவ்வாறு கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவரின் கண்ணை மருத்துவர்களால் அகற்றப்பட்ட நிகழ்வு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்துள்ளது.

கேரளாவில் மலப்புறம் மாவட்டம் திரூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். சுமார் 62 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டநிலையில், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கொரோனா சிகிச்சையில் இருந்தபோது நிமோனியா காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார்.

இந்த இரு பாதிப்புகளில் இருந்தும் குணமடைந்த போதிலும் அவருக்கு முகத்திலும், தலையிலும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் கோட்டக்கல்லில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அவர் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்துல் காதரின் மூளைக்கும் கருப்புப் பூஞ்சை பரவக்கூடும் என்ற அச்சத்தால் அவரின் இடது கண்ணை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர்.  நீண்ட காலமாக அப்துல் காதருக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதாகவும், அவரின் கண் அகற்றப்பட்டு தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.