சியோல்

நேற்று தென்கொரிய விமானம் பறக்கும் போது ஒரு பயணிஅவசரக் கதவை திறந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

தென் கொரிய நாட்டின் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று தென்கொரியாவில் உள்ள ஜெஜூ தீவிலிருந்து டேகு நகருக்கு 194 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது, அவசரக் கால கதவைப் பயணி ஒருவர் திடீரென்று திறந்தார்.

இவ்வாறு கதவைத்  திறந்ததால் காற்று வேகமாக விமானத்துக்குள் வீச ஆரம்பித்தது. பல பயணிகள் நிலைதடுமாறி அச்சத்தில் உறைந்தனர். சிலர் மயக்கமடைந்து விழு,.சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக விமானம் டேகு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இந்த அவசரக்கால கதவைத் திறந்த 30 வயது மதிக்கத்தக்க நபரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர்,

“விமானம் தரையிலிருந்து 250 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கதவைத் திறந்த அந்த நபர், விமானத்திலிருந்து குதிக்க முயன்றார். விமானப் பணியாளர்களால் கதவை மூட முடியவில்லை. நாங்கள் நிச்சயம் உயிர் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம்”

என்று தெரிவித்துள்ளார்.