சென்னை:

நூறு ரூபாய் நிதி கொடுப்பவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்கலாம் என்று மதிமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து மதிமுக தலைமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்க விரும்பும் மதிமுகவினர் குறைந்த பட்சம் ரூ.100 நிதி தர வேண்டும் என்று  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதிமுக தலைமைக்கழகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

கழகப் பொதுச்செயலாளருக்கு, கழகத் தோழர்கள் இனி யாரும் சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக கழகத்திற்கு நிதி வழங்கலாம்.

கழகப் பொதுச்செயலாளருடன் முகப்படம் (செல்ஃபி)  எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்த பட்சம் நிதியாக ரூபாய் 100/- வழங்க வேண்டும். கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.