சென்னை,

திமுக அம்மா அணியில் இருந்து சசிகலாவை நீக்கினால் ஆட்சி கவிழும் என்று எடப்பாடி அணியினருக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெ.மறைவை தொடர்ந்து இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக, தற்போது 3 அணிகளாக சிதறுண்டு உள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இடையே இணைப்பு நிகழும் என்றும், ஓபிஎஸ் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்றும் யூகங்கள் கிளம்பியது. அதற்கேற்றார்போல், ஜெயலலிதா சமாதியும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

இதற்கு ஏற்றார்போல், கவர்னர் வித்யாசாகர் ராவும் திடீரென சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில், டிடிவி தினகரனும் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 16 பேருடன் தனியாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் இன்று ஓபிஎஸ் அணி, சசிகலாவையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று புதிய நிபந்தனை விதித்துள்ளது. இதன் காரணமாக இரு அணிகளும்  இணைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சசகிலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால், ஆட்சி கவிழும் என்றும் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கவர்னரை சந்திக்க இருக்கும் டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வதாக கடிதம் கொடுப்பார்கள் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக எடப்பாடியின் ஆட்சி கவிழ்வதற்கான சூழல் நீடித்து வருகிறது.

ஓபிஎஸ்.சின் கடைசி நேர நிபந்தனை காரணமாக எடப்பாடி தலைமையிலான அரசு கலைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாரதியஜனதாவுக்கு ஆதரவாக, அதிமுகவுக்கு துரோகம் இழைத்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழகம் வருகை ஒத்தி வைக்கப்பட்டதாகவும்த பரபரப்பான தகவல்கள் உலா வருகின்றன.