டில்லி
தனியார் மயமாக்கும் திட்டம் தோல்வி அடைந்தால் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக மூடப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தற்போது ரூ.58 ஆயிரம் கோடி கடன் சுமையில் உள்ளது. ஆகவே இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையொட்டி கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விற்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை.
இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்க மார்ச் மாதம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இன்று மாநிலங்களவையில் ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டால் விமானிகள் பதவி விலக வேண்டுமா என்ற கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்தார்.
அமைச்சர் தனது பதிலில், “அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது. இதில் அனைத்து ஊழியர்களுக்கும் சாதகமான முடிவு எடுப்போம் என நான் உறுதி அளிக்கிறேன்.
தற்போதுள்ள நிலையில் என்னால் இந்த அவையில் இவ்வளவுதான் கூற முடியும். ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சி தோல்வி அடைந்தால், ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக மூடப்படும்” எனத் தெரிவித்தார்.