டெல்லி: எல்லையில் எதையும் எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படை  தயாராக உள்ளதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா இடையே கடந்த சில மாதங்களாக எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15ம் தேதி மோதல் மூண்டது. இரு தரப்பு வீரர்களும், கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து எல்லையில், இந்திய ராணுவத்தினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.  இந் நிலையில் எல்லையில் உள்ள நிலைமை குறித்து இந்தியா விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா பேசியதாவது:

வடக்கு எல்லைகளில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலை நீடிக்கிறது. எது நடந்தாலும், எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் தயாராக உள்ளன. எதிர்காலத்தில் மற்ற நாடுகளுடன் மோதல் ஏற்பட்டால் அதில் வெற்றி பெறுவதில், விமானப் படையின் பங்கு முக்கியமாக இருக்கும் என்று கூறினார்.