சென்னை

மிழக மக்கள் காக்கப்படும் வரை தாம் முதல்வருக்கு ஆலோசனை சொல்ல உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதுவரை 82,275 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு அதில் 1079 பேர் மரணம் அடைந்து 42,437 பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தமது ஆலோசனைகளை முதல்வர் கேட்பதில்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி இருந்தார்.  அவர் ஆக்கப்பூர்வமான ஆலோசனை ஏதும் சொல்லவில்லை என முதல்வர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “அரசுக்கு ஸ்டாலின்  ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளாக என்ன சொல்லியிருக்கிறார் என்று முதலமைச்சர் கேட்டுள்ளார்.அவருக்கு இதற்கு மேல் என்ன ஆலோசனைகள் சொல்வது என்று எனக்கே தெரியவில்லை. அந்தளவுக்கு ஆலோசனைகளை மார்ச் மாதம் 16ம் தேதியில் இருந்து சொல்லி வருகிறேன். இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன். அதனை மீண்டும் முழுமையாகப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளும் திறன் இருக்குமானால், புரிந்து செயல்படுத்துங்கள் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

‘ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?’ என்று பிரச்சினையைத் திசை திருப்பி வருகிறார் பழனிசாமி. நான் சொன்ன ஆலோசனைகள் மக்களுக்குத் தெரியும். முதல்வருக்கு இதுவரை தெரியவில்லை என்றால் இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். தொற்றுப் பகுதியை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண்போல தடுங்கள். தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள். மக்களைக் காக்கும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் அரசு காக்க வேண்டும்.

பரிசோதனைகளை மாவட்ட வாரியாக வெளியிடுங்கள். மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விளக்கம் அளியுங்கள். பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுங்கள். சித்த மருத்துவ மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேளுங்கள். கேரளா எப்படி மீள்கிறது. தாராவி எப்படிக் காக்கப்படுகிறது என்பதை தெரிந்தறியுங்கள்.

 இவை அனைத்தும் நான் ஏற்கனவே சொன்னவை.மீண்டும் சொல்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்வேன். சொல்லிக் கொண்டே இருப்பேன். மக்கள் காக்கப்படும் வரை,”எனப் பதிந்துள்ளார்.