பாட்னா: மகா கூட்டணியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவுடன் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மீண்டும் மதசார்பற்ற கூட்டணியில் இணைய தூது அனுப்பியதாகவும், ஆனால் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

தான் விரைவில் வெளியிடவுள்ள புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது: மகாகூட்டணியிலிருந்து வெளியேறி, பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சியமைத்த அடுத்த 6 மாதங்களில், மீண்டும் மதசார்பற்ற அணிக்கு திரும்ப நிதிஷ்குமார் விரும்பினார்.

அதற்காக, அவரது கட்சியின் துணைத்தலைவரும், தனது நம்பிக்கைக்குரியவருமான பிரசாந்த் கிஷோரை, 5 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் என்னை சந்திக்க அனுப்பினார்.

ஆனால், அந்த வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன். எனக்கு நிதிஷ்குமாரின் மீது வெறுப்பில்லை என்றாலும், அவரிடம் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டேன்.

கடந்த 2015ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், மகாகூட்டணிக்கு வாக்களித்த மக்களின் மனநிலை மற்றும் நாடு முழுவதும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக அணிதிரண்டுள்ள கட்சிகள் ஆகியவற்றை நினைத்து, நான் மறுத்துவிட்டேன்” என்றுள்ளார்.

ஆனால், லாலு பிரசாத் யாதவின் இந்தக் கருத்தை, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி முற்றிலும் நிராகரித்துள்ளது,

– மதுரை மாயாண்டி