ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்லிவந்த அவரது அண்ணன் மகள் தீபா தற்போது, “ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை” என்று மாற்றிச் சொல்லியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பலனின்றி மரணமடைந்தாதக அறிவிக்கப்பட்டது. அப்போது அவருடன் இருந்தவர் அவரது நெருங்கிய தோழியான வி.கே சசிகலா.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள், “ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது மருத்துவமனைக்குச் சென்று பார்க்க முயன்றபோது, சசிகலா குடும்பம் என்னை அனுமதிக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார். மேலும், “ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து சர்ச்சை நிலவுகிறது. அதை தெளிவுபடுத்தவேண்டும். முதல்வர் என்ற முறையில், அவரது சிகிச்சை குறித்து அனைவருக்கும் தெரிந்துகொள்ளும் உரிமை இருக்கிறது. முதல்கட்ட சிகிச்சை என்ன… எது பலன் அளித்ததது… எது அளிக்கவில்லை என்பதையெல்லாம் விளக்க வேண்டும். இவ்வளவு நெருக்கடியான சூழலில் , ஜெயலலிதா அருகிலேயே உதவியாளராக இருந்தவர்கள் ஏன் ஏதும் சொல்லவில்லை..” என்று சசிகலா குறித்து சந்தேகக் கேள்வியை தொடர்ந்து எழுப்பி வந்தார்.

இந்த நிலையில், நேற்று அவர் செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், “ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை” என்று மாற்றிப் பேசியிருக்கிறார்.
அவரது இந்த மாற்றம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.