னைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்று சொல்வது போல்-மக்களவை தேர்தல் என்றாலே அனைத்து தரப்பும் உ.பி.மாநிலத்தையே உற்று  நோக்கும்.

மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் மாநிலமாகவும்,புதிய பிரதமரை தேர்வு செய்து அனுப்பும் பிராந்தியமாகவும்-நெடுங்காலமாக இருந்து வருகிறது –உ.பி.

இந்த முறை அந்த மாநிலத்தில் பலமான கூட்டணியை கட்டமைத்துள்ளார்- சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்.25 வருட பகையை மூட்டை கட்டி வைத்து விட்டு –மாயாவதியின் பி.எஸ்.பி.கட்சியுடன் கை கோர்த்துள்ளார் அகிலேஷ்.

உ.பி.கூட்டணி,பிரியங்காவின் பிரவேசம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அகிலேஷ் அளித்துள்ள பேட்டியின் சாராம்சங்கள் இங்கே:

‘’பா.ஜ,க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எனது பிரதான குறிக்கோள்.அதனால் தான் பி.எஸ்.பி.யுடன் கூட்டணி வைத்தேன்.கூட்டணிக்கு மாயாவதி எந்த நிபந்தனையும் விதிக்க வில்லை.அதுபோல் நானும் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை.

அரசியல் ராஜ தந்திரங்களை நான் பா.ஜ.க.விடம் இருந்து கற்றுக்கொண்டேன்.அந்த தந்திரங்களை இப்போது பா.ஜ.க.வுக்கு எதிராக பயன் படுத்துகிறேன்.

அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பெரிய கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கி இருக்க வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு –மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் தேர்தலின் போது வந்தது. அந்த வாய்ப்பை காங்கிரஸ் தவற விட்டு விட்டது.

இன்றைய சூழலில் உ.பி.யில் காங்கிரசுடன் உடன்பாடு காண்பது சாத்தியமில்லாத ஒன்று.’’

என்று கூறிவரிடம் ,பிரியங்காவின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது-

‘’அவரது அரசியல் வருகை பற்றி இப்போது கணிப்பது கஷ்டம். ஒன்று மட்டும் சொல்ல முடியும்.உபி.வாக்காளர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள்’’ என்று முடித்து கொண்டார்.

—பாப்பாங்குளம் பாரதி