லண்டன்:

கை விரல் காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து விலகிய தவான் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இடது கைவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக, துரதிருஷ்டவசமாக உலகக்கோப்பை தொடரில் இனி என்னால் தொடர முடியாது என்பதை உருக்கமாக தெரிவிக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டு உள்ளார்.

நடப்பு உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், இந்திய துவக்க வீரர் தவானுக்கு இடது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த போட்டியில் அவர் ‘பீல்டிங்’ செய்யவில்லை. இதன் பின் அவரது விரலை ஸ்கேன் செய்து பார்த்த போது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதன் காரணமாக தவான் மூன்று வாரங்கள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப் பட்டது. அவருக்கு பதில் ரிஷப் பந்த்  வரவழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரது கைவிரல் காயம் குணமாகாதபடியால், எஞ்சியுள்ள தொடரில் பங்கேற்கமாட்டார் என அதிகாரப் பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. மாற்று வீரராக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனக்காக வேண்டிக்கொண்ட இந்திய ரசிகர்களுக்கு  தவான் நன்றி தெரிவித்து, உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவதை வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

அந்த வீடியோவில், ‘இந்த உலகக்கோப்பை தொடரில் இனி என்னால் தொடர முடியாது என்பதை உருக்கமாக தெரிவிக்கிறேன். எதிர்பாராதவிதமாக காயம் குறிப்பிட்ட நேரத்தில் குணமடைய வில்லை. ஆனால் இந்திய அணி தொடர்ந்து செல்ல வேண்டும். எனக்காக பிரார்தனை செய்து கொண்ட இந்திய ரசிகர்கள் மற்றும் சக வீரர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.