திருவனந்தபுரம்:
22வது சர்வதேச திரைப்பட திருவிழா கேரளாவில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘கேரளாவில் நான் பேசுவதற்கு வரும் போது எவ்விதமான உரையும் தயாரித்து வரவில்லை. ஏன் என்றால் இங்கு பேசுவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது.
அச்சமின்றி சுதந்திரமாக சுவாசிக்கும் ஒரே மாநிலம் என்பதால் எனக்கு கேரளாவை அதிகம் பிடிக்கும். எங்கு நான் பேச சென்றாலும் நேர்மையாக பேச வேண்டும் என்று நம்புவேன். என்னை யார் மிரட்டினாலும் அவர்களை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வரும். என்னை அமைதிபடுத்த வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் நான் பாட்டு பாட தொடங்கவிடுவேன். என்னிடம் இருந்து அவர்கள் என்ன எடுத்துவிட முடியும்?’’ என்றார்
மேலும், அவர் பேசுகையில், ‘‘எஸ்.துர்கா என்ற திரைப்படத்தின் தலைப்பில் சிலருக்கு பிரச்னை ஏற்பட் டுள்ளது. அதே சிலருக்கு ‘துர்கா ஒயின் மற்றும் பார்’ என்று பெயர் வைப்பதில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஒரு குரலை ஒடுக்க நினைத்தால் வேறு ஒரு சத்தமான குரல் பிறக்கும். நான் எந்த அரசியல் கட்சியையும் சேராத காரணத்தால் எனது குரலை நடிகர் என்ற முறையில் எழுப்ப முடிகிறது’’ என்றார்.
‘‘நான் இந்த சமூகத்துக்கான எனது பொறுப்பை உணர்கிறேன். சமூகத்தின் அன்பை பெற புகழ் மற்றும் நிலைக்கு ஏற்ப நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டியது முக்கியம். மக்களை கோழையாக நாம் உருவாக்கினால் இந்த சமூகமே கோழையாகிவிடும். சிந்தனை செய்பவர்களை மிரட்டினால் அடுத்த தலைமுறை சிந்திக்கவே அச்சப்படும். அது நடக்க நாம் விடக்கூடாது’’ என்றார்.