மனைவியைக் கொன்றுவிட்டு பிணத்துடன் 2 நாள் உறக்கம்..

போபால் அருகே உள்ளது மோத்திநகர்.  இங்கு வசித்து வந்த தம்பதி ஷெர் சிங் – ஆர்த்தி அஹிர்வார்.  இவர்களுக்கு 10 வயதுக் குழந்தை ஒன்று உள்ளது.

கணவர் சிங்குக்கு குடிப்பழக்கம் உள்ளது.  குடி போதையில் மனைவியைக் கண்மூடித்தனமாக அடித்துத் தாக்குவது வாடிக்கையாகிப் போனது ஷெர் சிங்கிற்கு.  இதனால் ஆர்த்தி அடிக்கடி தன் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவார்.

சில தினங்களுக்கு முன்பும் இதே போலக் கணவர் குடி போதையில் தகராற்றில் ஈடுபடவும், ஆர்த்தி அம்மா வீட்டுக்குச் சென்ற விட்டார்.  பின்னர் சமாதானமாகிக் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தார்.  ஆனாலும் சண்டை நின்றபாடில்லை.

இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்குத் தகவல் தந்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து போலீஸ் வந்து விசாரித்த போது,  இவர்களுக்குள் மீண்டும் தகராறு வெடித்ததாகவும், மனைவியைக் கொலை செய்துவிடுவேன் என்று சொல்லி விட்டு சிங், ஒரு பெரிய கத்தியை வாங்கிச் சென்றதாகவும் அனைவரும் தெரிவித்தனர்.

இதையடுத்து சிங்கை விசாரிக்க போலீசார் வீட்டுக்குள் நுழையும்போதே ரத்த வாடை அதிகமாக வீசியுள்ளது.  ஆனால் ஆர்த்தியை காணோம்.  வீடெங்கும் தேடிப் தேடி பார்த்தபோது படுக்கைக்குக் கீழே ஒரு மரப்பெட்டி போன்ற ஒன்றில் ஆர்த்தி பிணமாகக் கிடந்தார்.  சடலத்தை அதில் மறைத்து வைத்துவிட்டு, அதன் மேல் கட்டிலைப் போட்டு சிங் இரண்டு நாட்களாகப் படுத்துத் தூங்கிக்கொண்டு வந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார் சிங்கை கைது செய்து, உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.  விசாரணையில், “ரெண்டு நாளைக்கு முன்னாடியே ஆர்த்தியைக் கழுத்தை நெரித்து கொன்னுட்டேன்.  யாருக்கும் தெரியாமல் இருக்கணும்னு படுக்கைக்கு கீழே ஒரு கப்போர்ட் ரெடி பண்ணி, அதுக்குள்ளதான் சடலத்தை பூட்டி வெச்சேன்” என்று சாவகாசமாக தெரிவித்துள்ளார் சிங்.  அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் , அதிர்ச்சியால் உறைந்து போய் உள்ளனர்.

– லெட்சுமி பிரியா