முத்தரப்பு டி-20 பெண்கள் தொடரில், இந்தியப் பெண்கள் அணி, வலுவான ஆஸ்திரேலியா நிர்ணயித்த சவாலான இலக்கான 173 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது குறித்து மேலும் சில சுவாரஸ்யங்களை அலச வேண்டியுள்ளது.

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி டி20 தரநிலையில் உலகின் முதலிடத்தில் உள்ளது. எனவே, அந்த அணியை வெல்வது எளிதல்ல. ஆனால், இந்திய பெண்கள் அணி, சரியான திட்டமிடுதலுடன் இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது.

முதல் போட்டியில், அதே ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தாலும், இரண்டாவது போட்டியில் அசத்தலாக வென்றுள்ளது. ஷஃபாலி வர்மாவின் 49 ரன்கள் மற்றும் மந்தனாவின் 55 ரன்கள் இந்த வெற்றிக்கான மிக முக்கிய காரணிகள்.

இந்திய அணியின் இரண்டு துவக்க வீராங்கனைகளும் 8.1 ஓவர்களிலேயே 85 ரன்களை இணைந்து சேர்த்தது அவர்களின் ரன் குவிக்கும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மந்தனா தொடர்ந்து களத்தில் நின்றதானது, இந்திய அணியின் ரன் ரேட் சரியாமல் இருக்க உதவியது. மேலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் தன் பங்கிற்கு தேவையான உதவிகளை செய்தார். இதுதவிர, தீப்தி ஷர்மாவும் வெற்றிக்கான தனது பங்கை ஆற்றுவதற்கு தவறவில்லை. மொத்தத்தில், இந்திய பெண்கள் அணி, முற்றிலும் வெற்றிக்கு ததியான அணி என்பதை நிரூபித்துள்ளது.