தாக்குர்நகர் 

சித்தியிடம் இருந்தெ வீட்டை அபகரிக்க முயன்றதாக மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் மீது மேற்கு வங்கத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் தாக்குர்நகரை சேர்ந்த சாந்தனு தாக்குர் மத்திய கப்பல்துறை இணை அமைச்சராக உள்ளார்.  மேற்கு வங்கத்தில் அவருடைய பாட்டி பினாபானி தேவி வசித்து வந்த பூர்வீக வீடு உள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடையும் வரை பினாபானி தேவி அந்த வீட்டில்தான் வசித்து வந்தார்.

பினாபாணி தேவியின் மரணத்துக்குப் பிறகு அவருடைய மருமகளும், மத்திய மந்திரி சாந்தனு தாக்குரின் சித்தியுமான மம்தா பாலா தாக்குர் வசித்து வருகிறார். மம்தா பாலா திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். சாந்தனு தாக்குருக்கும், மம்தா பாலா தாக்குருக்கும் இடையே  அந்த வீட்டின் உரிமை தொடர்பாக, அவ்வப்போது மோதல் நிலவி வந்தது.

தற்போது தனது, வீட்டை வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்வதாக சாந்தனு தாக்குர் மீது மம்தா பாலா தாக்குர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அமைச்சர் சாந்தனு தாக்குர் தனது ஆதரவாளர்களுடன் வந்து வீட்டை தனது கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றபோது இருவரின் ஆதரவாளர்களும் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதைத் தொடர்ந்து, மம்தா பாலா தாக்குர் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில், மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துத் தான் சட்டப்பூர்வ வாரிசாக இருந்தபோதிலும், மம்தா பாலா தாக்குர் வலுக்கட்டாயமாக வீட்டை ஆக்கிரமித்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.