நியூயார்க்

தீபாவளி பண்டிகை அன்று அமெரிக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

எனவே அமெரிக்காவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்கும் சட்டத்தை முதன் முதலாக பென்சில்வேனியா மாகாணம் இயற்றியது. தொடர்ந்து நியூயார்க் மாகாண நிர்வாக சபை உறுப்பினரும், இந்திய வம்சாவளியுமான ஜெனிபர், தீபாவளி பண்டிகையன்று அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

இது செனட் சபை மற்றும் நிர்வாக சபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அங்கு வசிக்கும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த சடடத்தை  நிறைவேற்றும் முயற்சி  கடந்த 2 ஆண்டுகளாகத் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது நிர்வாக சபையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.