தண்டஹேரா: டெல்லி – குருகிராம் எல்லையின் அருகே, தண்டஹேராவில், இறைச்சிக் கடையை மூட வேண்டுமென மிரட்டிய கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஹரியானாவின் குர்கோன் மாவட்டத்திலுள்ள தண்டஹேரா என்ற இடத்திலுள்ள இரண்டு இறைச்சிக் கடைகளை, நவராத்திரியை முன்னிட்டு மூடுமாறு, கையில் கட்டைகள், வாட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்திய கும்பல் மிரட்டுவது போன்றும், அந்தக் கடைகளின் ஷட்டர் கதவுகளை இழுத்து மூடுவது போன்றும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது.

அந்த நபர்கள் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களில், இருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 நபர்களின் பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதர நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

குறிப்பிட்ட கடைகள், தகுந்த உரிமம் பெற்றுள்ளனவா? என்ற விசாரணையும் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

– மதுரை மாயாண்டி