டேராடூன்

புல்வாமாவில் நடந்த தாக்குதல் முன்னிட்டு காஷ்மீரை சேர்ந்த மாணவர்களை இந்து அமைப்பான பஜ்ரங் தள் தாக்கி உள்ளது.

 

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நாடெங்கும் உள்ள பல கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட காஷ்மீர் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். டேராடூனில் பல கல்லூரிகளில் இவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களில் 12 பேர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களை இந்து அமைப்பினரான பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய இரு அமைப்பினரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ள்னர். அப்போது அவர்கள் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பி உளனர்.

இந்த 12 பேரில் இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் தங்களை திடீரென சிலர் தாக்கியதால் பயந்து போய் அங்கிருந்து ஒடி உள்ளூர் நண்பர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த விகாஸ் வர்மா தாக்குதல் சம்பவத்தை மறுக்காமல் இனி எந்த ஒரு காஷ்மீர் இஸ்லாமியரும் இங்கு வசிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். வி இ ப அமைப்பின் சியாம் சர்மா, “புல்வாமாவில் நடந்ததை மீண்டும் நடத்தலாம் என கனவு கூட காணக்கூடாது என்பதற்கு நாங்கள் மாணவர்களுக்கு பாடம் புகட்டினோம்” என தெரிவித்துள்ளார்.

இது போல் தாக்குதல் சம்பவங்கள் நிகழும் போது மாணவர்களுக்கு உதவ காஷ்மீர் மாண்வர் சங்கம் ஹெல்ப் லைன் ஒன்றை தற்போது அமைத்துள்ளது. இந்த ஹெல்ப் லைன் மூலம் காஷ்மீர் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு உள்ளே அல்ல்து வெளியே தாக்கப்படும் போது உதவிகள் வழங்கப்படும் என அந்த சந்தத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.