மதுரை: மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை முன்னிட்டு, தொடர் ஜோதி ஓட்டத்தை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், மதுரையில் அதிமுக நடத்த உள்ள மாநாட்டுக்கு தடைகோரி உயர் நீதிமன்றக் கிளையில் சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விமான நிலையத்தின் அருகில் மாநாடு நடக்க உள்ளது; பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்கு மாநாடு நடத்த விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மக்கள் அதிகமாக வருவதால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த மாநாட்டிற்கு அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், சுந்தர் மற்றும் பாரத சக்கரவர்த்தி கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது இந்த மாநாடு குறித்து நான்கு மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்து விட்டனர்? கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு முடியும்? என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மதுரை மாநாட்டில் வெடிப்பொருட்களோ பட்டாசுகளை வெடிக்க மாட்டோம் என்று அதிமுக தரப்பு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

களைகட்டிய மதுரை அதிமுக மாநாடு 

மதுரையில் ஆக.20-ல் நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரங்குகள், முகப்புகள் அமைக்கும் பணியில் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக பிளவுபட்ட நிலையில் கட்சி, சின்னத்தை கைப்பற்றிய கே.பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் போன்றோர், அதை ஏற்றுக்கொள்ள மறுத்து அதிமுகவை பழனிசாமியிடம் இருந்து மீட்காமல் விடமாட்டோம் என அவருக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றனர்.

அதிமுகவின் 90 சதவீத நிர்வாகிகள் கே.பழனிசாமி பக்கம் இருந்தாலும், கட்சியைத் தாண்டி தமிழக அரசியலில் தனது செல்வாக்கை நிரூபிக்கவும், அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலுக்கு அதிமுகவை தயார்ப் படுத்தக்கூடிய இக்கட்டான நிலையில் உள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச் செயலாளராக பொறுப் பேற்றபோது மதுரையில் ஆக.20-ல் கட்சியின் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மதுரை வலையங்குளத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டுப் பந்தல், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவு தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணிகள் மிகப்பெரிய அளவில் நடக்கின்றன. 5 லட்சம் சதுர அடியில் மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது.

மாநாட்டு மேடை மட்டும் 20 அடி நீளம், 100 அடி அகலத்தில் டிஜிட்டல் மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் தலைவர்கள் பேசும்போது, அவர்கள் பேசும் காட்சி நேரலையில் மேடையின் பின்புறம் உள்ள டிஜிட்டல் திரையில் மேடை முன் அமர்ந்திருக்கும் தொண்டர்களுக்குத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு நுழைவாயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கீழே இருவருக்கும் நடுவில் கே.பழனிசாமி இருக்கும் வகையில் அரண்மனைத் தோற்றத்துடன் பின்னணியில் மலைக் குன்றுகள் இருப்பது போன்று முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

5 ஆயிரம் சமையல் கலைஞர்கள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு தயாரிப்பதற்காகவே மாநாட்டுப் பந்தல் அருகே 35 ஏக்கரில் தனித் தனியாக உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புளிசாதம் போன்ற முன்கூட்டியே தயாரிக்கக்கூடிய உணவுகள் நேற்று முதல் தயாரிக்கும் பணி தொடங்கியது. 10 லட்சம் தொண்டர்களுக்கு உணவு தயார் செய்யப்படுகிறது.

இப்பணியில் 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 90 ஆயிரம் கிலோ அரிசி, 30 ஆயிரம் கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள், பலசரக்குப் பொருட்கள் தேவையான அளவுக்கு நேற்று முதல் வந்து இறக்கப்பட்டன. தொண்டர்களுக்கு உணவு பெரிய பாக்கு மட்டை தட்டுகளில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. புளிசாதம், பருப்பு சாதம், ஒரு பொறியல், துவையல் வழங்கப்பட இருக்கிறது.

இதில், புளிசாதம் எந்நேரமும் கிடைக்கும் வகையில் பொட்டலமாக தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து வரும் நிர்வாகிகள், தொண்டர்களின் வாகனங்கள் மதுரை விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாகவும், கப்பலூர் டோல்கேட், தோப்பூர் வழியாக விமான நிலையம் செல்லும் சாலை, காரியாபட்டி வழியாக வலையங்குளம் மாநாடு நடக்கும் இடத்துக்கு எளிதாக வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டுக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்த 350 ஏக்கரில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் தேவையான அளவு அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் வருவோர் முந்தைய நாள் இரவு மாநாடு நடக்கும் இடத்துக்கு வருவதற்கு 10 கி.மீ., சுற்றளவில் இரவைப் பகலாக்கும் வகையில் மின்விளக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், எம்எல்ஏ-க்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் போன்றோர் தங்குவதற்கு மதுரையில் உள்ள ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளைப் பிடித்து முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல், மாநாடு நடக்கும் இடத்தின் அருகில் முக்கியத் தலைவர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தற்காலிக வீடுகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

51 அடி உயர கொடிக் கம்பம்: மாநாடு நடைபெறும் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 51 அடி உயரம் கொடிக்கம்பத்தில் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றி வைக்கிறார். மாலை 4 மணியளவில் இசைநிகழ்ச்சி, பட்டிமன்றம், பேச்சு அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மாலை வரை நடக்கின்றன. மாலையில் மீண்டும் வரும் கே.பழனிசாமி, கட்சியின் மூத்த மற்றும் இரண்டாம் தலைவர்கள் பேசிய பின் மாநாட்டில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

மாநாட்டுக்கு 10 லட்சம் பேர் வரை வருவார்கள் என அதிமுக தலைமை எதிர்பார்க்கிறது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதா மதுரை, கோவை, திருச்சி போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மாநாடுபோல் பிரம்மாண்ட கூட்டத்தைக் காட்டி தமிழக அரசியலில் தனக்கான செல்வாக்கை காட்டினர். அந்தத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியைப்பிடிக்க அதுபோன்ற பிரமாண்ட கூட்டங்கள் முக்கியக் காரணமானது.

அதுபோலவே கே.பழனிசாமி, வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை நிரூபிக்க பிரம்மாண்ட கூட்டத்தை இந்த மாநாட்டு மூலம் நிரூபிக்க நினைக்கிறார். அவரது இந்தத் திட்டம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது இந்த மாநாட்டுக்குப் பிறகு தெரிய வரும். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்களான செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னின்று செய்து வருகின்றனர்.

மதுரை அதிமுக எழுச்சி மாநாட்டின் சிறப்புகள் என்னென்ன?

01. நிகழ்ச்சிகளை தொலைவிலிருந்து காணும் வகையில் மேடையில் பிரமாண்டமான ‘டிஜிட்டல்’ திரை

02. மாநாடு வளாகத்தில் தொண்டர்கள் அமர 1.25 லட்சம் நாற்காலிகள்

03. காலை 7:00 முதல் இரவு 7:00 வரை உணவு வழங்க ஏற்பாடு..

04. காலையில் இட்லி, பொங்கல், வடை, உப்புமா, சட்னி, சாம்பார்; மதியம் ‘வெஜிடபிள்’ பிரியாணி, தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், காய்கறிக் கூட்டு, பொரியல், அப்பளம்..

05. உணவு சமைக்க சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், உணவு பரிமாறுவோர், பாத்திரம் சுத்தம் செய்வோர் என 10,000 பேர்..

06. மூன்று இடங்களில் 300 கவுன்டர்களில் பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கவும், அமர்ந்து சாப்பிட டேபிள் நாற்காலிகளும் ஏற்பாடு..

07. மாநாட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள்

08. நகரின் முக்கியப் பகுதிகளிலும் எல்.இ.டி. திரையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு..

09. மாநாட்டுக்கு வருவோர் நான்கு திசைகளிலும் இருந்து பந்தலுக்கு வர வழி செய்யப்பட்டு உள்ளது.

10. வாகனங்களை நிறுத்த 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு, 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

11. குடிநீர் வழங்க 300 மி.லி. அளவு கொண்ட 10 லட்சம் குடிநீர்பாட்டில்களுக்கு ‘ஆர்டர்’ தரப்பட்டுள்ளது.

12. ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தவும், சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

13. பந்தல் அருகே 150 மொபைல் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இது தவிர ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14. மாநாட்டை காலை 8:00 மணிக்கு அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கட்சிக் கொடியேற்றி துவக்கி வைக்க உள்ளார்.

15. அவருக்கு தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்க உள்ளனர்.

16. காலையிலிருந்து மாலை வரை கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

17. அன்று மாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி உரையாற்றுகிறார்..

15. மாநாட்டையொட்டி புகைப்படக் கண்காட்சி நடக்க உள்ளது. கண்காட்சியில் கழக வரலாறு, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி ஆகியோரின் திரைப்படம், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன.

16. மாநாட்டுக்கு வரும்படி மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 10,000 குடும்பங்களுக்கு ‘வீடுதோறும் இலை’ என்ற தலைப்பின் கீழ் மரக்கன்றுடன் மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்க கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

17. ஒவ்வொரு தொகுதியிலும் மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை பொதுச்செயலாளர் இபிஎஸ் கவுரவிக்கிறார்.