சென்னை

னி திங்கள்கிழமைகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடக்காது எனச் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

நேற்று உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது.   இதில் ஒரு பகுதியாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பட்டதாரி மருந்தாளுநர் சங்கங்கள் சிறப்பு ரத்த தான முகாம் நடத்தின.   இந்த முகாமை தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்

அப்போது ராதாகிருஷ்ணன், “கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் உச்சத்தில் இருந்தது.  அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் குறைந்தது. 1,500 என்ற அளவில் குறைந்தது. மீண்டும் தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 1,700 ஆக அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் விழாக்கள், நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாகக் கூடுவது, முறையாக முகக் கவசம் அணியாதது ஆகியவையே ஆகும்.  இவ்வாறு தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த. காய்ச்சல் வந்தவுடனேயே தாமதம் செய்யாமல் மருத்துவ மனைக்கு மக்கள் செல்ல வேண்டும்.

தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொண்டு அடுத்த ஒரு மாதத்துக்குள் அனைவரும் தாமாக முன்வந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு தரும் வகையில் திங்கள்கிழமைகளில் செலுத்தும் பணி நடைபெறாது” என தெரிவித்துள்ளார்.