மதுரை: வருகிற 10ந்தேதி அன்று மூலிகை பெட்ரோல் தயாரிப்பை தொடங்க உள்ளதாக மூலிகை பெட்ரோல் புகழ் ராமர்பிள்ளை தெரிவித்து உள்ளார். இந்த முறை அவர் தனது தயாரிப்பை கேரளாவில் தொடங்குகிறார்.

மூலிகைகளில் இருந்து  பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி கடந்த 1996ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தமிழகத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளை. அவரது தயாரிப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து  இந்த மூலிகை பெட்ரோலை செய்யும் பார்முலாவை திருட அரசியல்வாதிகள் முயற்சி செய்தனர். அதன் பயனாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார்.

இந்த நிலையில், அவரது மூலிகை பெட்ரோலை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்பை ஏற்கவில்லை. அவரது பெட்ரோலி கலப்படம் இருப்பதாக குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை   3 ஆண்டுகள் சிறையிலும் தள்ளினர்.

அதையடுத்து கடந்த இரு ஆண்டுகளுக்கு பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்,   “ 2016ம் வருடம் டிசம்பர் மாதம் மூலிகை பெட்ரோல் திட்ட வரைவை பிரதமர் பார்வையிட்டார்.  அதனை முழுமைப்படுத்தக் கூறினார். ஆனால் அதை நிறைவேற்றக்கூடாது என பல சதிகள் நடக்கின்றன.  எனது தயாரிப்பு குறித்து, நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  இல்லை என்றால் நான் மறைந்துவிட்டேன் என்று செய்திதான் உங்கள் காதுகளுக்கு எட்டும். இதை நான் மரணத்தில் விளிம்பில் இருந்து கேட்டுக் கொள்கிறேன்” என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவான ராமர்பிள்ளை கேரளாவில் வசிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில்,  கேரளாவில் வருகின்ற 10ஆம் தேதிமுதல் மூலிகை பெட்ரோல் உற்பத்தி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமர்பிள்ளை,  கழிவுநீர் மூலமும், விவசாய கழிவுகளைக் கொண்டும் உயிரி டீசல், உயிரி பெட்ரோல், உயிரி சமையல் எரிவாயு தயாரித்து வருவதாகவும், தனது தயாரிப்புக்காக “கேரளா அரசு மூணாறு பகுதியில் 1,600 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து கொடுத்து, அங்கு மூலிகை பெட்ரோல் உற்பத்திசெய்ய அனுமதி அளித்துள்ளது. அங்கு தேவையான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன.  வரும் 10ஆம் தேதிமுதல் மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்குகிறோம் என்று கூறினார்.

மூலிகை எரிபொருள்கள் குறித்து என் மீது தொடரப்பட்ட வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையினர் போதிய ஆதாரத்தை நிரூபிக்க இயலாத நிலையில் நீதிமன்றம் என்னை விடுவித்தது என்று கூறியவர், மூலிகை பெட்ரோல் குறித்து தவறான தகவலைப் பரப்பிவருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், லடாக் பகுதியில் எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சனையைத் தீர்க்க இந்திய ராணுவம் என்னை அழைத்த நிலையில் சாதாரண டீசலைவிட உயிரி டீசல் வீரியம் மிக்கது என ராணுவத்தினர் ஒப்புகொண்டுள்ளனர்.

இந்தியாவை முன்னேற்ற உயிரி பெட்ரோல் தயாரிப்பைத் தவிர வேறு வழியில்லை. கேரளாவில் 77 பகுதிகளில் மூலிகை பெட்ரோல் உற்பத்தியைத் தொடங்கவுள்ளோம்.

தமிழ்நாட்டில் உயிரி பெட்ரோல் தயாரிப்பது குறித்து முதலமைச்சரிடம் அனுமதி கேட்கவுள்ளோம். எனது கண்டுபிடிப்பிற்கு கார்ப்பரேட் எதிர்ப்பு கிடையாது.

வரும் 9ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் மூலிகை பெட்ரோலை உருவாக்கி காட்டவுள்ளோம்.  என்னுடைய தயாரிப்பை முடக்க நினைப்பவர் யார் என்பது குருமூர்த்திக்குத் தெரியும். மூலிகை எரிபொருள்களை கேரளாவில் வரியுடன் சேர்த்து டீசல், பெட்ரோல் விலை 39 ரூபாய்க்கு கொடுப்போம். உயிரி கேஸ் 16 லிட்டர் ரூ. 250-க்கு வழங்கவுள்ளோம்.

தமிழ்நாட்டில் தயாரிக்கும்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்ட மிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.