பீஜிங்

சுவாச பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் சீனாவில் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

சீனா இன்னும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடாத சூழல் காணப்படுகிறது. தற்பொது புதிய வகை மர்மக் காய்ச்சல் சீனாவைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.  கல்வி நிலையங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கொரோனா பெருந்தொற்றின் தொடக்க நிலைகளின்போது காணப்பட்ட அதே நிலைமை மீண்டும் ஏற்பட்டு உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது., தேசிய சுகாதார ஆணையத்தின் சுகாதார அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அதில், அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளை பற்றி எடுத்துரைத்தனர்.

லையானிங் மாகாணத்தில் தீவிர நிலைமை காணப்படுகிறது. இங்குப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலருக்கு, குழந்தைகள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் வரிசையில் காத்து கிடக்கின்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வகுப்புகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டன.

சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த பாதிப்பு நிம்மோனியா வகை தொற்றால் ஏற்படுகிறது என்றும் இதனால் தீவிர சுவாச கோளாறுகள் ஏற்பட்டு, சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படும் என நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கின்றது.