ஐதராபாத்:

தெலுங்கானாவின் தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோல்கொண்டா அரண்மனை. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோல்கொண்டா அரண்மனையில் தான் முதன் முதலாக வைரங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்த அரண்மனையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் நேரில் பார்வையிட்டு சென்றார்.

இதற்கிடையே அரண்மனையில் சீரமைப்பு பணிகளை தொல்லியல் துறையினர் செய்து வந்தனர். அரண்மனையின் ஒரு பகுதி சுவர் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை.

இதற்கிடையே கடந்த சில தினங்களாக தெலுங்கானாவில் மழை கொட்டி தீர்த்தது. ஐதராபாத் உள்பட மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கனமழை காரணமாக வலுவிழந்த கோல்கொண்டா அரண் மனையின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.