சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே  பரவலாக மழை பெய்து வருகிறது. இரவிலும் பல இடங்களில் மிதனமா மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.

சென்னையில்   கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில்,  பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.  நேற்று இரவும் பல பகுதிகளில் மழை பெய்தநிலையில், இன்று காலையும் சில இடங்களில் மழை பெய்தது.  கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, அசோக்நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், அடையாறு, பட்டினம்பாக்கம், மேடவாக்கம், தரமணி உள்பட பல இடங்களில் லேசான மழை பெய்தது. தற்போது வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.

நடப்பாண்டு கொளுத்திய  கோடையின்  அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) வெயிலை, இந்த மழை தணித்துள்ளது.  மே மாதத்தில் தொடக்கம் முதல் வெயில் வாட்டி எடுத்து வந்தது. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதன்பிறகு, வெப்பச்சலனம் காரணமாக, சில இடங்களில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தாலும் பெரிய அளவில் மழை இல்லாமல் இருந்தது. ஆனால், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது முதல்  கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது.

இந்த நிலையில், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரி,  கர்நாடக கடலோர பகுதிகளில் 22ந்திவரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக 22-ஆம் தேதி வாக்கில் அதே அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்.

இதன் காரணமாக,  இன்று  வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிதரம், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும்,  கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் மிககனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.