பெங்களூரு

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக ஆதரவு வேட்பாளர் பிரிஜ்வால் ரேவண்ணாவின் தந்தை எச் டி ரேவண்ணா வுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

கரநாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் எச்.டி. ரேவண்ணாவின் மகனான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எம்.பி.யாக உள்ள அவர், தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு பற்றி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்ட  அதே நாளில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு பிரஜ்வால் தப்பி சென்று விட்டார். இவர், பல பெண்களை கட்டாயப்படுத்தி அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டு உள்ளன என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில், 2019-ம் ஆண்டுக்கு பின்னர் பெங்களூரு மற்றும் ஹாசன் நகரில் உள்ள வீடு, வீட்டில் உள்ள சேமிப்பு கிடங்கு மற்றும் அலுவலகம் என பல இடங்களில் வைத்து, பிரஜ்வால் தன்னுடைய மொபைல் போனில் பல வீடியோக்களை பதிவு செய்து, பின்னர் அவற்றை லேப்டாப்புக்கு மாற்றியுள்ளார். மெலும் இதுபோன்று பென் டிரைவில், 2,976 ஆபாச வீடியோக்கள் பதிவாகி உள்ளன என்றும் அவற்றில் பல வீடியோக்கள் சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை ஓட கூடியவை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹாசனில் உள்ள ரேவண்ணா வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அளித்த புகாரில், ஹோலேநரசிப்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான எச்.டி. ரேவண்ணா 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் பல முறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டை கூறி மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தேவகவுடாவின் மூத்த மகனான எச்.டி. ரேவண்ணா, கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின்போது அமைச்சராக இருந்தவர். கடந்த 2019-ல் வேலைக்கு சேர்ந்த 4-வது மாதத்தில் இருந்து ரேவண்ணா அடிக்கடி தன்னை அவருடைய வீட்டுக்கு கூப்பிட்டார் என அந்த பெண் புகாரில் தெரிவித்து இருக்கிறார்.

புகாரில், ரேவண்ணாவின் மனைவி எப்போதெல்லாம் வீட்டில் இல்லையோ, அப்போது அந்த பெண்ணை அழைத்து கொண்டு, சேமிப்பு அறைக்கு சென்று விடுவார். இதன்பின்பு பழங்களை தரும் சாக்கில் பல இடங்களில் தொட்டார். சேலை உள்ளிட்ட ஆடைகளை களைந்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என அந்த பெண் குறிப்பிட்டு உள்ளார்.

எனவே 354ஏ, 354டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரு செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா தாக்கல் செய்த மனு தள்ளுபடியான பின்னர் அவர் கைது செய்யப்பட்டு. சிறப்பு விசாரணை குழுவின் காவலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.

ரேவண்ணாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. நேற்று மாலை பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து அவருடைய முக்கிய உறுப்புகள் சீராக இருக்கின்றன என அவர்கள் தெரிவித்தனர். பின்னர், சிறப்பு விசாரணை குழு அதிகாரிகளுடன் அவரை திருப்பி அனுப்பி வைத்தனர்.