சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கரின் எதிர்கால நடவடிக்கை குரித்து பிரமாணப் பத்திரம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 4 ஆம் தேதி பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கரை, கோவை காவல்துறையினர் தேனியில் கைது செய்தபோது கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. , பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து,  சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை ரத்து செய்து தனது மகனை விடுவிக்கக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவில்,

“காவல்துறையினர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எனது மகன் மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை சட்டவிரோதமாக பதிவு செய்து, ஒவ்வொரு நீதிமன்றமாக ஆஜர்படுத்தி வருகின்றனர். காவல் துறையால் தாக்கப்பட்டதால் கை மற்றும் பல்வேறு இடங்களில் காயம் அடைந்துள்ள எனது மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. 

போலீஸாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனது மகன் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். எனவே,  எனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்’

எனக் கோரியிருந்தார்.

நேற்று காலை இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு,  சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு அதன்படி இந்த வழக்கு, பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.  அந்த ஆவணங்களை பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கை நாளை (மே 24) விசாரிப்பதாகக் கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.

அப்போது,  எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்யமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  தமிழ்நாடு முதல்வரை ஒருமையில் அழைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்,

”இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதால்,  இன்று மாலையே சிறையில் உள்ள அவரை சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்”

என உத்தரவிட்டுள்ளனர்