சென்னை

புயல் காரணமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கனமழை ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒரு சில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.

ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு மீண்டும் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.