சேலம்:
நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டாயிரத்து 39 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 517 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வெளி மாநிலங்களிலிருந்து குட்கா தமிழகத்திற்கு வராமல் தடுக்க மாநில எல்லையோர பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கோவை மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

சேலம் சரகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த 81 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 52 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். சேலம் தர்மபுரி நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த துப்பாக்கிகளை கோவை மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலிஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதனையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, “கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் கள்ளத் துப்பாக்கிகள் அதிக அளவில் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கடந்த 15 நாட்களாக தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இதில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 52 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் அறிவுரையை ஏற்று 29 நாட்டு துப்பாக்கிகள் தானாக முன்வந்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்போர் தானாக முன்வந்து ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது. மீறி துப்பாக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான 8 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 2000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குட்கா விற்பனை முழுமையாக தடுக்கும் வகையில் மாநில எல்லைப் பகுதியில் கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து குட்கா தமிழகத்தில் நுழையாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறு கடைகளில் குட்கா பறிமுதல் செய்யப்படும் போது அவர்களுக்கு எங்கு கிடைத்தது என்பதை விசாரித்து அறிந்து பிரதான இடங்களில் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உதவி மையம் அமைக்கப்பட்டதன் மூலம் இதுவரை 107 மனுக்கள் நேரடியாகவும் 47 அழைப்புகள் 181 இலவச தொலைபேசி வாயிலாகவும், 1098 மூலம் 56 அழைப்புகளும் வந்துள்ளன. சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 878 இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த ஒன்றரை மாதத்தில் 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபர் குற்றங்களை பொருத்தவரை பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் சிறிய விஷயத்திற்காக ஆசைப்பட்டு தங்களுடைய முக்கிய தகவல்களை யாருக்கும் தெரிவித்து விடக்கூடாது.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை அதிக அளவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் விபத்துகள் நடைபெறும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு முற்றிலும் விபத்துகளை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.