ட்ச்

குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் நிரப்பும் ஆலையில் நடந்த கோஷ்டி மோதலில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார்.

நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.   இதையொட்டி ஆக்சிஜன் ஆலைகள் முழு அளவில் இயங்கி வருகின்றன.  அவ்வகையில் ஆக்சிஜன் நிரப்பும் ஆலைகளும் முழு வேகத்தில் இயங்கி வருகின்றன.  இதில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள மோட்டா சிராய் கிராமத்தில் உள்ள ஆலையும் ஒன்றாகும்.

நேற்று முன்தினம் இரவு இந்த ஆலைக்கு வெளியே ஒரு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  வெகு நேரமாகியும் அந்த வாகனத்தை யாரும் எடுக்காததால் வழியை விடச் சொல்லி ஒரு குழுவினர் தகராறு செய்துள்ளனர்.   இந்த வாகனம் நிறுத்தலுக்கு ஆதரவாக வேறு சிலர் பேச கடும் மோதல் ஏற்பட்டுள்ளது 

இந்த மோதலில் ராஜ்ப ஜடேஜா என்னும் ஒருவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மூன்று முறை தரையை நோக்கிச் சுட்டுள்ளார்.  இதனால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அங்கு இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் உடனடியாக செயல்பட்டு துப்பாக்கியைப் பிடுங்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் 2 அடையாளம் தெரியாதோர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.   இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.