டோதரா

ம்மைத் தாமே மணம் செய்யும் குஜராத்தி பெண் தேனிலவுக்குக் கோவா செல்ல உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றவர் ஆவார். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்  இவரும் மற்ற இந்தியப் பெண்களைப் போலவே ஜூன் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய திருமணத்துக்கும் தயாராகி வருகிறார்.

இந்திய திருமணத்துக்கான பிரேத்யேக ஆடை மற்றும் அனைத்து சம்பிரதாயங்களும் இவருடைய திருமணத்தில் நடைபெறவுள்ளது. மேலும் தனது திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களையும் இவர் அழைத்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தில் மணமகன் இல்லை.  ஷாமா தம்மைத் தாமே மணம் புரிய உள்ளார்

ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல்முறையாகக் குஜராத்தில் நடைபெறவுள்ளது. ஷாமா பிந்து இது குறித்து, ”நான் சிறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்தேன்.  என்னைத் திருமணம் எனும் பாரம்பரியம் பெரிதாக ஈர்க்கவில்லையே தவிர நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன்.   ஆகவே என்னை நானே மணந்துகொள்ள முடிவு செய்தேன்.

நான் பார்த்த ஒரு வெப்சீரிஸில் நடிகை ஒருவர் , எல்லா பெண்களும் மணமகளாக விரும்புகிறார்களே தவிர மனைவியாக அல்ல எனப் பேசியிருப்பார்.   இதை பார்த்ததும் என்னை நானே மணந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மீண்டும் தோன்றியது. இந்தியப் பெண்கள் யாராவது இது போன்று திருமணம் செய்திருக்கிறார்களா என்று இணையத்தில் தேடிப் பார்த்ததில், யாரும் அப்படிச் செய்துகொள்ளவில்லை.

திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். பொதுவாகப் பெண்கள் தாங்கள் காதலிப்பவரைத் திருமணம் செய்து கொள்வார்கள். நான் இந்த திருமணம் மூலம் என்னை நானே காதலிக்கப் போகிறேன்.

இந்தத் திருமணத்தை என்னுடைய பெற்றோர் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சிதான். ஜூன் 9 அன்று மெஹந்தி நிகழ்ச்சியும் திருமணம் ஜூன் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது   எனது திருமணம் முடிந்த பின்னர் இரண்டு வாரம் ஷாமா தேனிலவுக்குக் கோவாவுக்கும் செல்ல உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.