ஆமதாபாத், 

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைபொருள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் குஜராத்துக்கு கடத்த முயன்ற ரூ.3500 கோடி போதைப்பொருட்கள் கடத்த முயன்றது தெரிய வந்தது.

பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக கொண்டு வரப்பட்டு பஞ்சாப், குஜராத் மாநில எல்லை வழியாக இந்திய பகுதிக்குள் போதைப்பொருள் ஊடுருவது தொடர்ந்து வருகிறது.

இதன் காரணமாக பஞ்சாப் மற்றும் குஜராத் கடலோர பகுதிகளிலும் ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குஜராத் கடற்பகுதி வழியாக சரக்கு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர காவல்படையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து,  கடலோர காவல்படையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர்.

அப்போது அந்த பகுதியில் வந்த சரக்கு கப்பலை வழிமறித்து இந்திய கடலோர காவல்படை மடக்கி சோதனை நடத்தியது. அப்போது அதில் சுமார் 1500 கிலோ அளவுக்கு ஹெராயின் எனப்படும் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து கப்பல் ஆழ்கடல் பகுதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், பிடிபட்ட போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3,500 கோடி ஆகும்.

அசாமில் ஓடும் ரயிலில்  ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஹெராயின்

அசாம் மாநிலத்தில் ஓடும் ரயிலில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அசாமிலிருந்து  டில்லி செல்லும் ராஜதானி ரெயிலில் ஹெராயின் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவல்களை தொடர்ந்து, கவுஹாத்தி வந்து சேர்ந்த ராஜதானி ரெயிலில் அவர்கள் சோதனையிட்டனர்.

அப்போது கேட்பாரற்றுக்கிடந்த பொட்டலங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அதில் ஹெராயின் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு 40 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கலாம் என்று தெரிவித்த அவர்கள், கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.