டெல்லி: ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ .1,12,020 கோடியை தொட்டுள்ளது.  அதில் சிஜிஎஸ்டி ரூ. 20,522 கோடி, மற்றும் எஸ்ஜிஎஸ்டி ரூ. 26,605 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக்கிய வணிக நிறுவனங்கள் முழுமையாக செயல்பட தடை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,12,020 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த  2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வருவாய் 30% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலையின் பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடநத ஜூன் மாதம் ஜிஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடிக்கு கீழ் குறைந்தது. பின்னர் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில்.  ஜூலை மாத ஜிஎஸடி வசூல் மீண்டும் ஒரு லட்சம் கோடியை கடந்தது இந்த நிலையில் தொடர்ந்து 2-வது மாதமாக ஆகஸ்ட மாதத்திலும் ஜிஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது

இதுகுறித்து மத்திய நிதியஅமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2021 ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,12,020 கோடி. இதில் மத்தியஅரசுக்கான  ஜிஎஸ்டி ரூ.20,522 கோடி. மாநில அரசுக்கான  ஜிஎஸ்டி ரூ. 26,605 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.56,247 கோடி ( இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 26,884 கோடி உட்பட) மற்றும் மேல்வரி (செஸ்) ரூ.8,646 கோடி ( இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.646 கோடி உட்பட). ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.23,043 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.19,139 கோடியும் மத்திய அரசு வழக்கம்போல் வழங்கிவிட்டது.

ஆகஸ்டு மாத மொத்த வருவாய்,  கடந்தாண்டின் இதே கால ஜிஎஸ்டி வருவாயைவிட 30 சதவீதம் அதிகம். இந்த மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனை வருவாய் (இறக்குமதி சேவைகள் உட்பட), கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 27 சதவீதம் அதிகம்.2019-20ம் நிதியாண்டின் ஆகஸ்ட் மாத வருவாயான ரூ.98, 202 கோடியுடன் ஒப்பிட்டாலும், இந்தாண்டு ஆகஸ்ட் மாத வசூல் 14 சதவீதம் அதிகம்.

அதிகரித்து வரும் ஜிஎஸ்டி வசூல்,  நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சியுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடவடிக்கைகள், போலி ரசீது மூலம் ஜிஎஸ்டி மோசடி ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் காரணமாகவும் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களிலும் ஜிஎஸ்டி வரி வசூல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்து உள்ளது.