ஸ்ரீஹரிக்கோடா: ஜிஎஸ்எல்வி-எஃப்10 புவி கண்காணிப்பு செயற்கை கோள் வரும் 12ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது என  இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அறிவிக்கப்பட்ட, ஊரடங்கால் இஸ்ரோ பணிகளும் தொய்வடைந்தன. தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பு நிலை திரும்பியுள்ளதால், இஸ்ரோ பணிகளும் மீண்டும் வேகமெடுத்துள்ளது.

இநத் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி ‘பி.எஸ்.எல்.வி. சி-51’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டுக்கான இரண்டாவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி-எஃப்10  ரக ராக்கெட்டை சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது. அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14 வது ராக்கெட்டாகும். இதில்  2,268 கிலோ எடை கொண்ட ‘ஈ.ஓ.எஸ்.-03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோள் இணைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம்,  இயற்கை பேரழிவுகள், வேளாண்மை, வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி ஆய்வு செய்ய முடியும். விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கை கோள், பூமியின் மேல்பரப்பில் இருந்து 36,000 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்த செயற்கை கோள் ஆகஸ்டு 12ஆம் தேதி காலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவதளத்தில் இருந்து, விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ‘கவுன்ட் டவுன்’ அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.