டில்லி

ரசுக்கு 5 ஜி ஏலம் மூலம் ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று முதல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கி உள்ளது.  இதில் 75 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது.  ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா நெட் ஒர்க்ஸ் என நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.  இதில் அதானி நிறுவனம் தனி பயன்பாட்டுக்காக ஏலத்தில் பங்கேற்றுள்ளது.

ஏலத்துக்கான வைப்பு நிதியாக ஜியோ ரூ.14,000 கோடி,ஏர்டெல் ரூ.5,500 கோடி, வோடஃபோன் ஐடியா ரூ.2,200 கோடி, அதானி குழுமம் ரூ.100 கோடி அளவில் செலுத்தியுள்ளன. இதில்  குறைந்த அதிர்வெண், நடுத்தர அதிர்வெண், உயர் அதிர்வெண் என மூன்று வகைகளில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது.

இவற்றில் 600, 700, 800, 900, 1,800, 2,100, 2,300 மெகாஹெர்ட்ஸ் ஆகியவை குறைந்த அதிர்வெண் வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 3,000 மெகாஹெர்ட்ஸ் நடுத்தர அதிர்வெண் கீழும், 26 ஜிகாஹெர்ட்ஸ் உயர் அதிர்வெண் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஏலம் 20 ஆண்டுகால பயன்பாட்டுக்காக நடத்தப்படுகிறது.   இதில் நிறுவனங்களின் நிதிச் சிக்கலைக் குறைப்பதற்காக, ஏலத் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நிறுவனங்கள், அலைக்கற்றைக்கான தொகையை மொத்தமாக இல்லாமல், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின்போது அவ்வாண்டுக்கான தொகையைச் செலுத்திக்கொள்ளலாம்.

நேற்று முன்தினம் ஏலத்தை முன்னிட்டு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போபால், டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் 5ஜி முன்னோட்ட சோதனை நடத்தியது.  முதல் நாளில் நடந்த 4 சுற்றுகளின் முடிவில் ஏலத் தொகை ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.  ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.