டெல்லி : உள்நாட்டு விமான பயணக் கட்டணம், 10-30 சதவிகிதம் வரை  வரம்பை  உயர்த்தி மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது விமான பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு (2020) மார்ச் இறுதியில்  பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்படி,  2021  மார்ச், 25 முதல் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.  பின்னர் மத்திய அரசு வழங்கிய தளர்வுகளைப் பொறுத்த, 2020ம் ஆண்டு மே 25ந்தேதி மீண்டும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுடன்  குறைந்த பயணிகளுடன் உள்நாட்டு விமானங்கள்  இயங்கத் தொடங்கியது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் இல்லாததால், குறைந்த பயணிகளைக்கொண்டு விமானம் இயக்கப்படுவதால், பல விமான நிறுவனங்கள், டிக்கெட் கட்டணத்தை  உயர்த்த முடிவு செய்தன. ஆனால் கட்டண உயர்வுக்கு மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம்  தடை போட்டது.  அதன்படி  ’40 நிமிட விமான பயணத்திற்கு குறைந்தபட்சம், 2,000 ரூபாயில் இருந்து அதிகப்பட்சமாக, 6,000 ரூபாய் வரை மட்டுமே, கட்டணம் வசூலிக்க வேண்டும்’ என, விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டது.

தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால் பல விமான சேவைகள் வழக்கம்போல தொடங்கி நடைபெற்று வருகின்றன.  அதனால், விமான டிக்கெட்டிற்கான கட்டண வரம்பை, மத்திய அரசு, 10-30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

இதனால், 40 – 210 நிமிடங்கள் வரையிலான விமான பயண கட்டணத்தில், குறைந்தபட்சம், 200 ரூபாய் முதல், அதிகப்பட்சம், 5,600 ரூபாய் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

விமான  கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு இருப்பது பயணிகளிடையே  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.