சென்னை:
நீட் தேர்வு விலக்கிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுதலை அடைவதற்கு முன்பே, ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று அனைவரையும் பாடச் சொன்னார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். விடுதலை பெற்ற இந்தியா அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் இந்தியாவாக தான் இருக்கும் என்று கனவு கண்டார். நாட்டின் 77வது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர்.

இது நம் முன்னோர் பெற்று தந்த விடுதலை, எல்லோருக்குமானதா அல்லது வசதி படைத்த வெகு சிலருக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவச் செல்வங்களின் உயிர்களை, நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள், நமது மனச்சாட்சியை உலுக்குகிறது. ஆனால், ஏழை எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார்.

‘நீட் தேர்வு விலக்கிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’ என்று பொதுவெளியில் பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசுகிறார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழக அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.

இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இன்று (14-8-2023) கடிதம் அனுப்புகிறேன். அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், திமுக, திருவள்ளுவர், வள்ளலார், சனாதனம் பற்றி ஆளுநர் பேசி வருவதை நாங்கள் மதிக்கவில்லை. அது கபட வேடம். ஆரியப் புலம்பலாக ஒதுக்கி தள்ளுகிறோம். ஆனால் ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படி தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதி. தமிழக மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது.

நாங்கள் இம்மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமை குரலை எழுப்பும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் – உயர் கல்வித் துறையைக் குழப்பியும் – தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் ஆளுநர் இருக்கிறார்.

இதன் உச்சமாக தமிழக மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக வரும் ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.