மும்பை: மகாராஷ்டிர ஆளுநருடனான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சந்திப்பு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிந்து, முடிவுகளும் எப்போதோ வெளியாகி விட்டன. தேர்தல் களத்தில் கைகோர்த்த பாஜக, சிவசேனா கூட்டணி அபார வெற்றி பெற்றது.


ஆனால் ஆட்சியில் சமவாய்ப்பு, முதலமைச்சர் பதவி என சிவசேனா நெருக்கடி அளிக்க அந்த கூட்டணி முறிந்தது. மற்ற கட்சிகளான சிவசேனா, தேசியவாத மற்றும் காங்கிரஸ் ஆட்சியும் அமையவில்லை.
அதனால், ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இந் நிலையில், ஆட்சி அமைக்கும் வகையில் சிவசேனா அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. தேசியவாத மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்க்க சிவசேனா தயாராகி விட்டது.


முதலமைச்சர் சிவசேனாவுக்கு என்றும் அமைச்சரவையில் யாருக்கு என்ன பதவிகள் என்பது பற்றி பேச்சுவார்த்தைகள் மூலம் பேசப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக ஆளுநர் கோஷ்யாரியை சிவசேனா, தேசியவாத மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று சந்திக்க இருந்தன. ஆனால் கடைசிகட்டத்தில் அந்த சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதனால், மகாராஷ்டிர அரசியலில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவி வருகிறது.