சென்னை:
ளுநர் ஆர்.என்.ரவி இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநரை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை. அவரை பொருட்படுத்தவே இல்லை என்பதே உண்மை. ஆளுநர் எங்களுக்கு பிரச்சாரக் கருவிதான். ஆளுநரை இங்கு இருந்து மாற்றிவிடக்கூடாது என முதலமைச்சர் கூறியுள்ளார். ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமிழ்நாடு என்ற பெயரையோ திராவிடம் என்ற சொல்லையோ நாங்கள் மாற்றிக்கொள்ளப்போவதில்லை. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு தொண்டாற்றி வரும் ஆளுநருக்கு நன்றி. திராவிட இயக்கமானது கடந்த 100 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டின் எழுச்சிக்கும், மீட்சிக்கும், உணர்ச்சிக்கும் உயர்வுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் உயர்வுக்கு காரணமாக திராவிட இயக்கம் அமைந்துவிட்டதே என்ற காழ்ப்புணர்ச்சியோடு ஆளுநர் பேசி வருகிறார்” எனத் தெரிவித்தார்.