டெல்லி: ஆயுள் தண்டனை கைதிகளை 14ஆண்டு சிறைவாசக்கு முன்பு விடுவிக்க ஆளுநருக்கே அதிகாரம் என  உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மாநிலங்களில் ஆட்சிகள் மாறும்போது காட்சிகள் மாறுவது வழக்கமான முறையாக இருந்து வருகிறது. அதுபோல,  ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர்கள் பெயரிலான விழாக்கள் வரும்போது, சிறையில் வாடும் ஆயுள்தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகிறது.  பல்வேறு மாநிலங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிப்பதாக கூறி, தங்களது ஆதரவாளர்களை விடுவிக்னறனர்.

இது சர்ச்சையான நிலையில், அரியானா மாநில அரசு,  சிறையில் உள்ள  தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து மாநில ஆளுநரிடம் ஆலோசிக்கத் தேவையில்லை என புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.  உயர்நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைப் பின்பற்றி, ஹரியானா அரசு தண்டனைக் கைதிகளை விடுவிக்கலாம் என்று கூறியது. இதை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில்  நடைபெற்றது. அதில், 433 – ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில், 14 ஆண்டு கால தண்டனையை பூர்த்தி செய்த கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என  கூறிய நீதிபதிகள், 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிப்பதற்கு முன்பே விடுவிக்க ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் விளக்கி உள்ளது.   மாநில அமைச்சரவையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே ஆளுநர் விடுவிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதில் மாநில அரசின் ஆலோசனைபடி செயல்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.