சென்னை:. 7.5% உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என, இன்று மாணவர்களுக்கான சேர்க்கை ஆணை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின், அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர  7.5% உள் ஒதுக்கீடு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தற்போது நடைபெற்று வரும் பொறியியல் கவுன்சிலிங்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்படி கல்லூரிகளில் இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  சேர்க்கை ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி சிறப்புரை ஆற்றானர். அப்போது, திராவிட இயக்கத்தின் நோக்கம் அனைவருக்கும் கல்வி என்பதுதான்; படிப்பவர்களுக்கு லெனின் கூறிய மூன்று முக்கிய இலக்கு படிப்பு, படிப்பு, படிப்பு. மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று. பல குடும்பத்தின் கனவு நிறைவேறும் நாளாக இது அமைந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் / இவ்வாண்டு 11,000 பேர் பயன்பெறுவார்கள்.

இதுமட்டுமின்றி,  கால்நடை, சட்டம், வேளாண்மை படிப்புகளில் 300 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள் என்றவர், உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்தி வருகிறது  என்பதையும் தெரிவித்தார்.

இந்த விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.