சென்னை

பிரபல சாமியார் சிவசங்கர் பாபா ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை புறநகரில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா என்னும் சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.  அந்த பள்ளி மாணவிகளிடம் சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு அளித்ததாக வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதை அடுத்து அவர் தலைமறைவானார்.

சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல்துறையினர் டில்லியில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.  அவரிடமும் மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் பூரண குணம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.  டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை காவல்துறையினர் மீண்டும் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.