டெல்லி:

கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரிப் கல்யாண் திட்டத்தின் மூலம் 80 கோடி குடும்பத்துக்கு நவம்பர் வரை உணவுபொருட்கள்  இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, , ‘நாட்டில் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை என்று வலியுறுதினார்.

மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, கரீப் கல்யான் அன்னா யோஜனா  திட்டத்தின் மூலம் நவம்பர் மாதம் வரை  ஐந்து மாதங்களுக்கு  இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்றார்.

அதன்படி, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ கடலைப் பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 80 கோடி குடும்பங்கள்  பயன் பெறுவார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கொரோனா காரணமாக மார்ச் மாதம் 24ந்தேதி ஊரடங்கு தொடங்கப்பட்டபோது,  கரிப் கல்யால் அன்னா யோஜனா திட்டத்திற்கு ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது மேலும் 90 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக இதுவரை மொத்தம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இந்த இலவச உணவு பொருட்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.