டெல்லி:

இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவராக கங்குலியை நியமிக்க பரிசீலனை நடந்து வருகிறது.

பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் செயலாளர் அஜய் ஷிர்க் ஆகியோரை அதிரடியாக அப்பதவிகளில் இருந்து நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

லோதா கமிட்டி பரிந்துரையை செயல்படுத்த வில்லை உள்ளிட்ட குற்றங்களுக்காக உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தன் மூலம் இவரகள் இருவரும் பதவியை இழந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 19ம் தேதி அன்று மீண்டும் வருகிறது. அன்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழிகாட்ட ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அதற்கு முன்பு வாரியத்துக்கு தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக உள்ள முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியை வாரிய தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஐபிஎல் உள்ளிட்ட நிர்வாகங்களை மேற்கொள்ள கிரிக்கெட் வாரியத்துக்கு உடனே தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.